6.11.25

A/L கண்ணம்மா என் காதலி கவிதை

கண்ணம்மா என் காதலி

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்

மூலைக் கடலினை யவ்வான வளையம்

முத்தமிட்டே தழுவி முகிழ்தல் கண்டேன்

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி

நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே

சாலப் பலபல நற்பகற் கனவில்

தன்னை மறந்தலயந் தன்னிலிருந்தேன்.



ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே

ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே

பாங்கினிற் கையிரண்டும் தீண்டியறிந்தேன்

பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்

ஓங்கிவரு முவகை யூற்றிலறிந்தேன்

ஒட்டு மிரண்டுள்ளத்தின் தட்டிலறிந்தேன்

வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா

மாய மெவரிடத்தில் என்று மொழிந்தேன்.



சிரித்த ஒலியிலவள் கை விலக்கியே

திருமித் தழுவி 'என்ன செய்தி சொல்' லென்றேன்

நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்து நித மேக மளந்தே

பெற்ற நலங்க ளென்ன? பேசுதி என்றாள்.



நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்

நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்

திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்

பிரித்துப் பிரித்து நிதமேக மளந்தே

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை

சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக