தியாகம்
கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார் காலையில் பலகாரம் சாப்பிட மணி பத்து ஆகும். அப்புறம் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து, காப்பிட்ட சிரமத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடையை நோக்கிப் புறப்படுவார். சரியாகப் பதினைந்து நிமிஷநடை பத்து இருப்பத்தைந்துக்குக் கடையில் வந்து உட்காருவார் கையில் கடிகாரம் கட்டாமலே நிமிஷக் கணக்கு தவறாமல் வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாளும் ஒரேமாதிரியாக அவர் கடைக்கு வருவதும் வீடு திரும்புவதும் இந்தக் காலத்துக் கடைச் சிப்பந்திகளுக்கு ஓர் அதிசயமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை-அவர் அந்தக் காலத்து மனுஷர், அவர் பழகிய உலகம் அவரை விட்டாலும் அவர் அதை விடத் தயாராக இல்லை.
அன்று காலை 10-25-க்குக் கடைக்கு வந்தார். கடைக்குள் நுழையும் போது முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டு மோ -ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி வைத்துக்கொண்டார். இந்த முகபாவத்தின் பிரதான அம்சம். கடுகடுப்பு: பிரதானமில்லாத அம்சம். ஒரு மாதிரியான விறைப்பு. இந்த முகபாவத்தைக் கடையில் உட்கார்ந்திருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றமாட்டார். நண்பர்களோ, அந்தஸ்துமிக்க வாடிக்கைக்காரர்களோ வரும்போது அவர் சிரிக்கவோ, புன்னகை செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றிவிடுவார்...
கடையில் வந்து உட்கார்ந்த செட்டியார், கணக்கு எழுதும் சோமசுந்தரம் பிள்ளையை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தார். பிள்ளையும் அவ்வண்ணமே செய்தார். பிறகு செட்டியார் முகத்தைத் திருப்பி, பெட்டியைத் திறந்து அங்கே கிடக்கும் சில்லறைக் காசுகளைக் கையால் துழாவிவிட்டு, கடைச் சிப்பந்திகளை-அந்த நான்கு பேரையும்-மொத்தமாகவும் தனித் தனியாகவும் பார்த்தார். இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்! எதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஆரம்பிக் கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே ஒரு கணம்தான். சாக்குக் கிடைத்து விடடது...
ஏண்டா, தடிப் பயகளா! நீங்க என்ன பரதேசிகளா, சந்யாசிகளாடா? எருமை மாட்டுப் பயல்கள்! விடிஞ்சதும் நாலு வீட்டுக்கு யாசகத்துக்குப் போற பிச்சைக்காரப் பயல் கூட இப்பிடி சாம்பலை அள்ளிப் பூச மாட்டானேடா? தரித்திரம் பிடிச்ச பயகளா! நீங்க வந்து கடையிலே நொளைஞ்சீங்களோ இல்லையோ, யாவாரம் ஒண்ணுக்குப் பாதியாப் படுத்துப் போச்சு. இன்னும் மிச்சம் மீதியையும் படுக்க வச்சிட்டுப் போகவாடா, இப்படி நெத்தியிலே அள்ளிப் பூசிக்கிட்டு வந்திருக்கீங்க, சாம்பலை!...
கடையில் புதிதாகச் சேர்ந்திருந்த ஒரு சிப்பந்தி, நீங்களும் விபூதி பூசியிருக்கங்களே, மொதலாளி? என்று கேட்டுவிட்டான்.
அடி செருப்பாலே! நாயே! வாயைத் தொறக்கிறியா நீ? (கணக்குப் பிள்ளையைப் பார்த்து) ஜோட்டாலே அடிச்சு வெளியே துரத்தும் இவனை! நமக்குச் சரிப்படாது. கஞ்சிக்கில்லாம செத்த
பயல்களை எரக்கப்பட்டுக் கடையிலே வச்சது என் முட்டாள் தனம், சோம சுந்தரம்பிள்ளை... என்று செட்டியார் பொரிந்து கொண்டிருக்கும் போது, கணக்குப்பிள்ளை அந்தப் புதுப் பையனைப் பார்த்து, வேலையைப் போய்ப் பாரேண்டா. மொதலாளி கிட்ட எப்பிடி ப் பேசணும்கிறது கூடத்தெரியல்லை யேடா, ஒனக்கு! உம்.போ! போய் வேலையைப் பாரு என்றார்.
அந்தப் பையனுக்கு ஆத்திரம் வந்தது. போதாக் குறைக்கு மற்ற மூன்று பையன்களும் திரும்பிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.
செட்டியார் அதோடு அவனை விட்டு விட்டார். மற்றொரு பையனைப் பார்த்து அஸ்திரத்தைத் தொடுத்தார்: ஏ கழுதே! உன்னைத்தானே! பருப்புலே ஒரே கல்லாக் கெடக்குன்னு சொன்னனே, பொடைச்சி வச்சியா கழுதை?
பொடைச்சிட்டேன், முதலாளி. கல்லு ஒண்ணும் இல்லையே? ன்
என்னடா! இல்லையா? அப்போ நான் பொய்யா சொல்றேன்? டேய்! இந்த மாதிரி நீ பேசிக்கிட்டே இருந்தா, செருப்படி வாங்கிக்கிட்டுத்தான் இந்தக் கடையை விட்டுப் போகப் போறே. ஆமா. நல்லா யாவுகத்திலே வச்சுக்கோ. வேலையை ஒழுங்காச் செய். சோமசுந்தரம் பிள்ளை, பயபேச்சைப் பார்த்தீரா? பார்த்துக் கிட்டீரான்னேன்? கடைக்கு வர்ரவனெல்லாம் ஒருத்தன் பாக்கி யில்லாமே, 'என்ன செட்டியாரே, இப்படிக் கல்லைப் போட்டி ருக்கிறீரே பருப்புலேன்னு கேக்கறான். இவன் என்னடான் னா 'பொடைச்சேன்: கல்லில்லே.ங்கிறானே, உம்..ஏ கழுதை, நீ பொடைச்சுது நெசந்தானா? கேட்டதுக்கு பதில் சொல்லு! இல்லே, இப்பிடியே கடையை விட்டுக் கழே எறங்கு...
சோமசுந்தரம் பிள்ளை அந்தப் பையனைப் பார்த்து, பொடைச்சேன்,கல்லைச்சுத்தமாப் பொறக்கிட்டேன் மொதலாளின்னு சொன்னா என்னப்பா? நெசத்தைச் சொல்றதுக் கென்ன? என்றார்.
அந்தப் பையன் பதில் சொல்லாமல் நின்றான்.
செட்டியார் கடைப் பையன்கள் அத்தனை பேரையும் மொத்தமாகப் பார்த்து, போங்கலே, எம் மூஞ்சியிலே முளிக்காதீங்க. ஒங்களைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறதுக்கு ஒரு குத்துக்கல்லைக் கட்டிக்கிட்டு மாரடிக்கலாம்... தொலைஞ்சி போங்கடா என்று விரட்டினார்.
கடைப்பையன்கள் நால்வரும் உள்ளே போய்விட்டார்கள். உள்ளே போனதும் பழைய மூவரும் சிரித்தார்கள்.
மறுநிமிஷமே செட்டியார் அவர்களை அழைத்தார். ஏண்டா, எங்கடா கூண்டோடகைலாசம் போயிட்டீங்க? உள்ளே சமுக்காளத்தை விரிச்சிப் படுத்துத் தூங்குங்கடா; நல்லாத் தூங்குங்க! இங்கேவர்ரவங்களுக்குப் புளியும் கடுகும்நான் நிறுத்துப் போடுறேன்.
புதுப் பையன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, நீங்கதானே மொதலாளி, உள்ளே போகச் சொன்னீங்க? நாங்க எது செஞ்சாலும் குத்தமாச் சொல்றீங்களே..." என்று, இரண்டு வாரங்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கக்கியே விட்டான்.
அவன் பேசியதைக் கேட்டு மற்றப் பையன்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிக்க, செட்டியார் தம் முகத்தை இன்னும் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு சோமசுந்தரம் பிள்ளையை ஏறிட்டுப் பார்க்க, பிள்ளை அந்தப் பையனைப் பார்த்து, ஏண்டா, 'பேசாதே பேசாதேன்னு ஒனக்கு எத்தனை தரம் சொல்றது? என்ன பயல்டா நீ? போய் அந்த ஈராங்காயத்தை மூட்டையிலேரு
எடுத்துக்கிட்டு வா... இங்கே பொட்டியிலே ஈராங்காயமில்லே என்றார்.
அதெல்லாம் எங்கே தெரியுது? எல்லாம் சொல்லித் தான் நடக்க வேண்டியிருக்கு. ஏண்டா, சோறு திங்கிறீங்களே, அதையும் சொன்னாத்தான் திம்பீங்களோ? இல்லை, கேக்கிறேன். இப்படி அறிவுகெட்ட பயல்களா வந்து நமக்குன்னு சேந்திருக்காங்களே, அதைச் சொல்லும்...டேய், ஒன்னைத் தாண்டா! அந்த முத்தையா பிள்ளை பாக்கியைக் கேட்டியா? அதையும் சொன்னாத்தான் செய்வியா?
கேட்டேன், மொதலாளி.
கேட்டியாக்கும்? கெட்டிக்காரன்தான்! கேட்டு வாங்கணும்னு தோணலியோ?
பாக்கியைக் குடுத்திட்டாரு'' என்று பெருமிதத்தோடு சொன்னான் பையன்.
அட! என்னமோ இவன் சாமர்த்தியத்திலே வாங்கின மாதிரியில்லே பேசுறான்! கடன் வாங்கினவர் குடுக்காமலா இருப்பாரு? முத்தையா பிள்ளை யோக்கியன். இவனைப் போல முடிச்சுமாறிப் பயலா இருப்பாருன்னு நெனைச்சான் போல இருக்கு. அதனாலேதான் 'குடுத்திட்டாருன்னு ரொம்பச் சவடாலாச் சொல்றான். ஏய், நீ எப்படிடா போய்க் கேட்டே? கண்டிப்பாக் கேட்டியா?
கண்டி ப்பாத்தான் கேட்டேன், மொதலாளி...
கண்டிப்பாக கேட்டியா? உன்னை யாருடா அப்படிக் கேக்கச் சொன்னது? எதம்பதமாப் பேசணும்னு ஓனக்கு எத்தனை
தரம் சொல்லியிருக்கேன்? கண்டிப்பாப் பேசினா நாளைக்கு எவண்டா கடைக்கு வருவான்?...
அப்போது சோமசுந்தரம் பிள்ளை குறுக்கிட்டு, சாவதான மாக, முருகையா, அந்தப் பெரிய கணக்கு நோட்டை இப்பிடி எடு என்றார்.
செட்டியார் முருகையாவை விட்டுவிட்டார். மற்றொரு பையனை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டி ருந்த சமயத்தில் ஷண்முகம் பிள்ளை கடைக்கு வந்து சேர்ந்தார்.
அண்ணாச்சி, வாங்க! என்று அவரை வரவேற்ற செட்டி யார், அந்தப் பையனைப் பார்த்து, ஏய் பரதேசி! நான் உனக்கு என்ன சொன்னேன்? என்னலே சொன்னேன்?... என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதேஷண்முகம் பிள்ளை பேச்சுக் கொடுத்தார். செட்டியாரையா, நாளைக்கு மதுரைக்குப் போறேன்... என்று தான் சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்தார். செட்டி யாரும் கவனத்தை அவரிடம் திருப்பினார். அத்துடன் சாமான்கள் வாங்கவும் இரண்டொருவர் வந்தார்கள். பையன்கள் சுறுசுறுப்பாக வேலை யில் ஈடுபட்டார்கள்.
கதிரேசன் செட்டியார் எப்பொழுது பார்த்தாலும் கடைச் சிப்பந்திகள் மீது இப்படிச் சீறி விழுவதைப் பல வருஷங்களாகப் பார்த்துக்கொண்டு வந்தவர் ஷண்முகம் பிள்ளை. ஒரு நாள் கூட செட்டியார் அன்பாக ஒரு பையனைப் பார்த்துப் பேசியதில்லை. மாதத்தில் பத்து நாட்களாவது அவர் செட்டியார் கடைக்கு வந்து சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவார். அவர் வந்து விட்டால் கடைப் பையன்களுக்கு ஒரே கொண்டாட் டம். ஏனென்றால், அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது செட்டியார் சஹஸ்ரநாம அர்ச்சனையைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
செட்டியாரும் கூட அர்ச்சனையை நிறுத்துவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதுவார்! சோமசுந்தரம் பிள்ளை குறுக்கிட்டுக் கடைப் பையன்களுக்கு புத்தி சொல்லத் தொடங்கி விட்டாலும், கொஞ்சம் மூச்சுவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார். பையன்களைத் தாம் திட்டும்போது தடுத்து நிறுத்துவதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்காகவே சோமசுந்தரம் பிள்ளையை அந்த முப்பது வருஷ காலமும் தம் கடையில் கணக்குப் பிள்ளையாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னாலும் தவறில்லை.
செட்டியாரின் குணாதிசயங்களெல்லாம் கடைப் பையன் களுக்கு மனப்பாடம். இரண்டு வாரங்களுக்கு முன் வந்து சேர்ந்த புதுப் பையன் வெங்கடாசலத்துக்கு இன்னும் முதற்பாடம்கூட சரிவரப் புரியவில்லை. அதனால்தான் அவனுக்குச் செட்டியார் திட்டும்போது உள்ளூற மனம் குமுறியது. பிச்சைக்காரன், கஞ்சிக்கு இல்லாதவன், நாயே, பேயே என்று எத்தனையோ இழிசொற்களைச் சேற்றிலே தோய்த்து எடுத்துச் செட்டியார் வீசியிருக்கிறார். அவன் சொல்லாமல் கொள்ளாமல் கடையை விட்டு ஓடி விடலாம் என்று நினைத்தாலும், தன் தகப்பனாரின் கண்டிப்புக்கு பயந்து இன்னும் அங்கேயே இருந்து கொண்டிருந் தான்.
அவனுடைய ரோஷத்தைக் கண்டும், செட்டியார் தங்களைத் திட்டுவதைக் கண்டும் மற்றப் பையன்கள் சிரித்ததற்குக் காரணம் அவர்களுக்கு மானமோ ரோஷமோ இல்லாததுதான் என்று யாராவது நினைத்தால், அதைவிடப் பெரிய தவறு வேறொன்றும் இருக்க முடியாது. அவர்கள் அங்கே இருந்து பழகியவர்கள். செட்டியாரின் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு: ஒன்று, வேறு எந்தக் கடையிலும் கடைச் சிப்பந்திகளுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட இங்கே அதிகச் சம்பளம்.தீபாவளிக்குப்புது வேஷ்டி சட்டைகளுடன் ஆளுக்குப் பத்து ரூபாய் ரொக்கமும் கொடுப்பார் செட்டியார். கடை வேலையைத் தவிர தம்மை மறந்துகூட வீட்டு வேலை செய்யச் சொல்லமாட்டார். அவருடைய வீட்டுக்குக் கடைப் பையன்கள் போனால், ஏகதேசமாகச் சாப்பிடச் சொல்வதும் உண்டு.எல்லாவற்றையும் விட முக்கியமாக,யார் என்ன புகார் சொன்னாலும், எந்தப் பையனையும் வேலையிலிருந்து நீக்குவதே கிடையாது. பையன்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்துகொள்ளும்போது, கல்யாணச் செலவுக்கு ஒரு கணிசமான தொகையும் கொடுப்பது வழக்கம். அவர் கடையில் வேலை பார்த்த பையன் பெரியவனாகித் தனிக் கடை தொடங்க நினைத்தால், அதற்கும் உதவி செய்வார். அப்படி அவர் கைதூக்கி விட்டு இன்று மூன்று பேர் அதே ஊரில் மளிகைக் கடைகளை லாபகரமாக நடத்திக்கொண்டு வருகிறார்கள்.-இந்த ரகசியங்களெல்லாம் கடைப் பையன்களுக்குத் தெரியும். அதனால்தான் அவருடைய வசை புராணத்தை ஏதோ வழக் கொழிந்த ஓர் அந்நிய பாஷையில் இயற்றப்பட்ட காவியமாகக் கருதி ஒதுக்கித் தள்ளி விட்டார்கள்.
2
காலையில் பையன்கள் விபூதி பூசி வந்ததைக் கண்டு சீறிவிழுந்ததைப் பார்த்த புதுப் பையன், மறுநாள் வெறும் நெற்றியோடு வந்துவிட்டான். அவ்வளவுதான்: நீ என்னடா சைவனா? இல்லை, வேதக்காரனா? (கிறிஸ்தவனா?) என்னலே முழிக்கிறே? ஒன் மூஞ்சியைப் பார்த்தா எவண்டா கடைக்கு வருவான்?..நெத்தியைச் சுடுகாடு மாதிரி வச்சிக்கிட்டு...
போய் விபூதியை எடுத்துப் பூசு என்று கணக்குப் பிள்ளை அவனுக்கு புத்தி சொன்னார். செட்டியார் திட்டுவதை உடனே நிறுத்திவிட்டார்.
அன்று ஷெண்பகவல்லியம்மன் கோவிலில் கடைசி நாள் விழா. பெரிய மேளக் கச்சேரி. வாண வேடிக்கைகள் எல்லாம் ஏற்பாடாகி யிருந்தன. வெளியூர்க் கூட்டம் தெருவெல்லாம் நிரம்பி வழிந்தது. அன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே-அதாவது, எட்டு மணிக்கே-கடையை அடைத்து விட்டுத் தாமும் கோவிலுக்குப் போகலாம், மற்றவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று முடிவு கட்டியிருந்தார் செட்டியார். ஏழரை மணிக்கெல்லாம் ஷண்முகம் பிள்ளை வந்தார். செட்டியார் தம் ஓய்வொழிச்சலற்ற வசை புராணத்தை நிறுத்தி, அண்ணாச்சி, வாங்க என்று புன்னகையோடு அவரை வரவேற்று விட்டு, மதுரைக்கு நேத்துத்தானே போனீங்க என்று ஆச்சரியத் தோடு கேட்டார்.
அங்கே சோலி? போன காரியம் முடிஞ்சதும் திரும்ப வேண்டியது தானே? இன்னிக்குக் காலையிலே முதல் வண்டிக்கே வந்துட்டேனே! குளிச்சுச் சாப்பிட்டேன். சொஞ்சம் அசந்து தூங்கினேன், தூங்கிப்பிட்டு வர்ரேன்...
செட்டியார் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஏழே முக்கால். இதுதான் சமயம் என்று ஆரம்பித்து விட்டார்.
ஏண்டா! தீவட்டித் தடியன்களா?
என்ன மொதலாளி என்று இரண்டு பையன்கள் ஏக காலத்தில் கேட்டார்கள்.
என்ன மொதலாளியா? நானும் ஒரு மணி நேரமாப் பார்த்துக்கிட்டே இருக்கேன், இந்தப் பயக வாயைத் தொறந்து கேட்கட்டும்னு. நீங்க எங்கே கேப்பீங்க? ஒங்களுக்குச் சாமி ஏது, சாத்தா ஏதுடா? அப்படி தெய்வபக்தி இருந்தா, ஒங்க மூஞ்சியிலே கொஞ்சமாச்சும் களை இருக்குமே! அறிவுகெட்ட பயகளா, இன்னைக்கு திருநாள் ஆச்சே, ஊர் பூராவும் கோயிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுதே, நாமளும் போகணும்னு ஏண்டா ஓங்களுக்குத் தோணல்லே?
அப்போது ஷண்முகம் பிள்ளை, மொதலாளி சொல்லாமே எப்படிக் கடையைப் போட்டுட்டுச் சாமி பார்க்கப் போவாங்க? நீங்க சொல்றது நியாயமில்லியே, செட்டியாரையா! என்றார்.
அமா,ஆண்ணாச்சி, சாமி கும்பிடுறது கூட மொதலாளியைக் கேட்டுத்தான் கும்பிடணும்! நீங்களும் அவங்க கட்சியிலே சேந்து பேசுங்க! என்றார் செட்டியார்.
சோமசுந்தரம் பிள்ளை, பையன்களைப் பார்த்து, கடையை
அடைப்பதற்கு எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைக்கச் சொன்னார். அவர்களும் ஐரூராக அந்த வேலையில் இறங்கினார்கள்.
செட்டியார் மிகவும் கவலையோடு, இந்தப் பயகளோட கத்திக் கத்தி என் தொண்டைத் தண்ணிதான் வத்துது, அண்ணாச்சி சேச்சேச்சே! என்று சலித்துக் கொண்டார்.
ஷண்முகம் பிள்ளை சிரித்தார்.
சிறிது நேரத்தில் கடையை எடுத்து வைத்துப் பூட்டி முடித்ததும் பையன்கள் கோவிலுக்குப் போக உத்தரவுக்குக் காத்திருந்தார்கள்.
என்னடா, கோயிலுக்குத்தானே? என்று கேட்டார் செட்டியார்.
ஆமா, மொதலாளி.
கோயிலுக்கு வெறுங்கையை வீசிக்கிட்டுத்தான் போகப் போறீங்களா?
பதில் இல்லை.
என்னடா, நான் கேக்கிறேன், பேசாம நிக்கிறீங்களே? வாயிலே என்ன கொளக்கட்டையா இருக்கு?
அதற்கும் பதில் இல்லை.
பாருங்க, அண்ணாச்சி, வாயைத் தொறக்கிறாங்களா பாருங்க.கோயிலுக்கு போறதுன்னா தேங்கா, பளம், சூடமெல்லாம் கொண்டு போகவேண்டாமா?
கொண்டுதான் போகணும் என்றார் ஷண்முகம் பிள்ளை.
அது இந்தப் பயகளுக்குத் தெரியுதா, பாருங்க... கடவுளே! கடவுளே! என்று தலையில் அடித்துக் கொண்டு, டேய்! இந்தாங் கடா, ஆளுக்கு ஒத்த ரூவா. போய், தேங்கா, பளம் வாங்கிட்டுப் போங்க, எங்க தலையிலே ஏன் களிமண்ணை வச்சே, சாமி? மூளையை வைக்கலேண்ணாலும் வெள்ளை மெளுகையாவது வச்சிருக்கக் கூடாதா?'ன்னு சாமியைக் கேளுங்கடா என்று சொல்லிவிட்டு நான்கு பேருக்கும் நான்குரூபாய்களைக் கொடுத்தார். பையன்கள் போய்விட்டார்கள்.
செட்டியார் சாவிக் கொத்தோடு வீட்டை நோக்கி நடந்தார்.
சாப்பிட்டு அம்பாளின் நகர்வலத்தைப் பார்ப்பதாக உத்தேசம். அம்பாள் கடைத்தெருவுக்கு வர மணி பதினொன்றாகிவிடும் என்பது அவருக்குத் தெரியும். ஷண்முகம் பிள்ளையும் அவரும் பேசிக் கொண்டே போனார்கள். அப்போது ஷண்முகம் பிள்ளை தாம் வெகுநாட்களாகக் கேட்க நினைத்ததை அன்று அப்பட்ட மாகக் கேட்டுவிடத் துணிந்தார்:
என்ன அண்ணாச்சி, ஒங்களை எப்போ நான் கோவிச்சிருக் கேன்? என்ன இப்பிடிக் கேக்கிறீங்க? நமக்குள்ளே என்ன வேத்துமை?
இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க, ஊரிலேயும் ஒங்களைப்பத்திப் பெருமையாப் பேசிக்கிறாங்க.
கடைப் பையன்களுக்கு உங்களைப் போலச் சம்பளம் குடுக்கிறவங்க இல்லேன்னும் எனக்குத் தெரியும். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஏன் இப்பிடி இருபத்து நாலு மணி நேரம் கடைப் பையன் களைத் திட்டிக்கிட்டே இருக்கிறீங்க? எப்போ வந்து பார்த்தாலும், எவனையாவது நிப்பாட்டிவச்சிக்கிட்டுப் பொரியிறிங்களே, எதுக்கு? கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்லை?
அண்ணாச்சி, அன்பாதரவா இல்லேன்னா நான் திட்டுவனா? அதைக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்க. பயகளை நெசமா எனக்குப் பிடிக்கலேன்னா, ஒரே சொல்லிலே கடையை விட்டு வெளியேத்திப்பிட்டு மறு சோலி பாக்கமாட்டனா? சொல்லுங்க, இந்த முப்பது வருசத்திலே, ஒருத்தனை நான் வேலையை விட்டுப் போகச் சொல்லியிருக்கிறனா? பயக விருத்திக்கு வரணும்னுதானே தொண்டைத் தண்ணியை வத்த வச்சிக்கிட்டி ௬க்கேன்? கத்திக் கத்தி என் உசுரும் போகுது.
ஏன் கத்தணும்? நல்லபடியா ஒரு சொல் சொன்னாப் பத்தாதா?
அப்படியா சொல்றீங்க, அண்ணாச்சி? சரிதான்! நல்லபடி யாகச் சொன்னா பயகளுக்குத் திமிர் இல்லே ஏறிப் போகும்? ஒடம்பு வளையுமா? அந்தக் காலத்திலே நான் கடைப் பையனா இருந்தப் போ எங்க மொதலாளி பேசினதை நீங்க கேட்டி ருக்கணும்...ம், அதிலே பத்திலே ஒரு பங்கு கூட நான் பேசியிருக்க மாட்டேன்; பேசவும் தெரியாது.
அப்பேர்ப்பட்டமொதலாளியா அவரு!
என்னங்கறீங்க? என்னப்பத்தி மட்டுமா? என் தாயி, தகப்பன், பாட்டன்-அத்தனை பேரையும் சேர்த்துக் கேவலமாப் பேசுவாரு. புளுத்த நாய் குறுக்கே போகாது. ஒரு நாள் என் மூஞ்சியிலே அஞ்சு பலப் படியையே தூக்கி வீசிட்டாரு. தலையைக் குனிஞ்சனோ, தப்பிச்சனோ! அப்படி யெல்லாம் வசக்கிவிடப் போய்த்தான் நானும் கடைண்ணு வச்சு, யாவாரம் பண்ணி, இவ்வளவு காலமும் ஒருத்தன் பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாமே நிர்வாகம் பண்ணிக்கிட்டு வர்றேன்...
ஷண்முகம் பிள்ளை செட்டியாரின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்க நினைத்தார். ஆனாலும் அப்புறம் சிரித்துக் கொள்ளலாம் என்று அதை அடக்கிக்கொண்டு, செட்டி யாரையா! ஓங்க மேலே தப்பில்லே; ஒங்க மொதலாளியைச் சொல்லணும். ஓங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் குடுத்திருக்காரு!...
செட்டியாருக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. அதனால் என்ன அண்ணாச்சி? என்ன சொல்றீங்க? என்று கேட்டார்.
ஒங்களைப் பாக்க எனக்கு உண்மையிலேயே பாவமா இருக்கு. இப்படித் கத்தினா மொதல்லே ஓங்க ஒடம்புக்கு ஆகுமா .
செட்டியாரும் தம் நிலையை எண்ணித் தாமே வருந்தினார்: என்ன செய்றது? நாமவாங்னெ வரம் அப்படி அந்தச் சோமசுந்தரம் பிள்ளை நடுவிலே ஏதாச்சும் செய்வாரு. அதுதான் சாக்குன்ணு கொஞ்சம் வாயை மூடுவேன். அவரு இல்லேன்னா நான் கத்திக் கத்தி மூச்சே போயிருக்கும். பயக நல்லாத் தலை எடுக்கணுமேன்னு தான் பாக்கிறேன். அவங்க தாய் தகப்பன்மாரு என்னை நம்பி ஒப்படைச் சிருக்காங்களே... என்னமோ அண்ணாச்சி, ராத்திரி ராத்திரி வீட்டிலே வந்து படுத்துக்கிட்டே நானா நெனைச்சி, வருத்தப் பட்டுக்கிடுவேன். ஒவ்வொரு சமயம் தொண்டை கட்டிக்கிடும். பாலிலே பனங்கல்கண்டும் மொளகும் போட்டுக் குடிப்பேன்.
மொதலாளின்னு ஆயிட்டோம், செய்றதைச் செய்யத்தானே வேணும்? அந்தா சம்புகவல்லி புண்ணியத்திலே இதுவரையிலும் ஒடம்புக்கு ஒண்ணு வந்து படுத்ததில்லை.
சரி சரி, எவ்வளவு காலம்தான் ஒடம்பு தாங்கும்? இனிமே ஓவ்வொண்ணையும் அப்பிடி இப்பிடி கொறைச்சிக்கிட்டு வரவேண்டியது தான். நமக்கு பகவான் தொண்டையை என்ன வெங்கலத்திலையா படைச்சிருக்கான்? '
ஷண்முகம் பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்ன புத்திமதி, நியாயமானதாகவே செட்டியாருக்குப்பட்டது. அனாலும் அதை ஒப்புக் கொள்வது சுயநலம் என்று கருதினார்.
அண்ணாச்சி! நீங்க என்னதான் சொல்லுங்க; பயக நல்லபடியாத் தலையெடுக்கணும். இவ்வளவு காலமும் இப்படி இருந்துட்டு இனி என்ன எக்கேடு கெட்டா என்னண்ணு என்னாலே இருக்க முடியாது. இனிமே என்ன? வயசு அறுபதாச்சு. உசுரை வச்சிருந்து என்னத்தைச் சாதிச்சிறப்போறோம்? என்று தியாக உணர்ச்சியோடு பேசினார். பேச்சில் ஒரு உறுதி நிறைந்திருந்தது.
ஷண்முகம் பிள்ளை அதைப் பார்த்து, அப்பிடின்னா, நித்தியப்படி அர்ச்சனை நடக்கும்ணுதான் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார்.
செட்டியார் அவருடைய சிரிப்பைப் பார்த்து மிகவும் மனம்
நொந்து கொண்டு, என்னமோ அண்ணாச்சி, ஒங்களுக்குச் சிரிப்பா இருக்கு. பாருங்க, இப்போ ஒங்ககிட்டே சரியாகக்கூடப் பேச
முடியல்லே, தொண்டை வலிக்குது. நான் பொறந்த வேளை!'' என்று அழமாட்டாத குறையாகச் சொல்லியபடி நடந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக